தமிழ் தேசிய கூட்டமைப்பு தமக்கு சாபவிமோசனம் தந்து, தம்மைப் புனிதர்கள் ஆக்கிவிட்டது என்று ஈ.பி.டி.பி தெரிவித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தங்களை புனிதர்கள் ஆக்கிவிட்டது எனவும், காலம் இன்று தம்மை விடுதலை செய்து விட்டது என்றும், ஒட்டுக் குழு என்றும் கொலைகாரர்கள் என்றும் தம்மைத் தூற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று எங்களிடம் ஆதரவு கோரி – ஆதரவு பெற்று தங்களை குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை செய்து விட்டது என்றும் ஈ.பி.டி.பி கூறியுள்ளது.
இன்று யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஈ.பி.டி.பி உறுப்பினர்களான ஜெகன், மற்றும் முடியப்பு றெமிடியஸ் ஆகியோர் இதனைத் தெரிவித்துள்ளனர்.
இதன்போது கருத்து தெரிவித்த ஈ.பி.டி.பி யின் யாழ் மாநகரசபை உறுப்பினரான முடியப்பு றெமிடியஸ், சிலர் பிள்ளைகள் , பேரப்பிள்ளைகளை சிங்கள பௌத்த கலாச்சாரத்திற்கு தாரைவார்த்துக் கொடுத்து விட்டு, 70 வயதில் வந்து தமிழ் தேசியத்தை தங்களுக்கு கற்று கொடுக்க முனைகிறார்கள் என்று சாடியுள்ளதுடன், 13 வயதில் இருந்தே தமிழ் தேசியத்திற்காக செயற்படுவதாக கூறியுள்ளார்.
எனினும் சிங்கள பேரினவாதத்துடனும், இன அழிப்பு இராணுவத்துடனும் இணைந்து, அவற்றுக்க ஈடாக தமிழ் மக்களை தாம் அழித்து ஒழித்தமை, அதற்கான நியாப்படுத்தல்கள் எதனையும் அவர் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.