இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதமரின் ஆசனம் மற்றும் பிரதமருக்கான வரப்பிரசாதங்களை, மகிந்த ராஜபக்சவுக்கு வழங்குவதற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய இணக்கம் தெரிவித்துள்ளார்.
இலங்கை சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால இதனைத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில், நாடாளுமன்றத்தை எதிர்வரும் 5 ஆம் நாள் கூட்டவுள்ளமை தொடர்பில் சபாநாயகரின் நீதியான இச் செயற்பாட்டிற்கு நாம் மதிப்பளித்து வரவேற்பதுடன் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துவெளியிடும் போதே, ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் பேசிய அஜித் பி பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.
ஏதிர்வரும் திங்கட்கிழமை நாடாளுமன்றைக் கூட்டி சுமுகமான தீர்வை பெற்றுக்கொள்ள வாய்ப்பிருக்கும் போது, குறுக்கு வழியில் திட்டம் தீட்டுபவர்களுக்கு ஏன் திங்கட்கிழமை வரையில் பொறுத்துக்கொள்ள முடியாது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்தோடு அதிகாரமில்லாத பிரதமரும், அவரால் நியமிக்கப்பட்ட அமைச்சர்களும் வழங்குகின்ற கட்டளைகளை பின்பற்றி, நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் செயற்பாடுகளை செய்ய வேண்டாம் என்று அரச அதிகாரிகளுக்கு தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பிற்கு முரணாகவும், சட்டவிரோதமாகவும், மக்களின் ஜனாநாயக விருப்பத்திற்கு மாறாகவும், நாடாளுமன்ற பெரும்பான்மைக்கு முரணாகவும் செயற்பட்டார் எனவும், சனாதிபதியின் சட்டவிரோத செயற்பாட்டிற்கு இந்த நாட்டு மக்கள் இன மத பேதமின்றி இணைந்து இன்றுறோடு 8 ஆவது நாளாகவும் அலரி மாளிகையில் கூடியிருந்து எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
தமக்கு கிடைத்த தகவலின் படி, தன்னை நாட்டின் பிரதமர் என்று சொல்லிக்கொண்டு திரியும் மகிந்த ராஜபக்சவும், அவரால் நியமிக்கப்பட்ட சில அதிகாரிகளும் ஒன்றுகூடி, இன்றைய நாளுக்குள் அலரி மாளிகையிலிருந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் அங்கு கூடியிருக்கும் மக்களையும் ஏதாவது ஒரு வகையில் வெளியேற்ற திட்டம் தீட்டுவதாக அறியமுடிகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையிலிருந்து பிரதமரையோ அல்லது அவருக்கு ஆதரவு தெரிவிக்க கூடியிருக்கும் மக்களையோ வெளியேற்றும் நடவடிக்கையில் இராணுவமோ எந்த அதிகாரியோ செயற்பட்டால் அது சட்டத்திற்கு முரணானது எனவும், அவ்வாறு சட்டத்திற்கு முரணாக நடந்து கொள்வார்களாயின், மக்கள் எடுக்கும் விபரீத நடவடிக்கைகளுக்கு பொறுப்பு சொல்ல நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.