வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் உள்ள பலாலி விமான நிலையத்தின் விரிவுபடுத்தலுக்காக இனங்காணப்பட்ட சுமார் 1,000 ஏக்கர் பொது மக்களின் காணிகளை சுவீகரிப்பதற்கான நில அளவை செய்யும் பணிகள் நேற்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சுவீகரிப்பு நடவடிக்கை தொடர்பாக தெல்லிப்பளை பிரதேச செயலரினால் குறித்த பகுதி கிராம சேவகர் ஊடாக காணி உரிமையாளர்களுக்கு அறிவிப்பும் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னர் பலாலி விமான நிலையத்தினை மீள் அபிவிருத்தி செய்ய இந்திய அரசாங்கத்தின் ஊடாக விரிவுபடுத்தல் பணிகளை மேற்கொள்ளவுள்ள ஆய்வு குழு ஒன்று அங்கு சென்று ஆராய்வுகளை மேற்கொண்டிருந்தது.
ஆனால் பலாலி விமான நிலையத்தின் விரிவுபடுத்தலுக்காக மக்களுடைய காணிகளை சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வலிகாமம் வடக்கு மக்கள் பல போராட்டங்ளை நடாத்தியிருந்தனர்.
அப்போது பலாலி விமான நிலைய புனரமைப்பிற்கு மேலதிக காணிகள் தேவை இல்லை என்றும், தமது புனரமைப்பு பணிகளுக்கு பொது மக்களின் காணிகள் தேவையில்லை என்றும் உத்தியோக பூர்வமான அறிவிப்புக்களை அதிகாரிகள் விடுத்திருந்தனர்.
இந்த நிலையிலேயே பலாலி விமான நிலைய விரிவுபடுத்தலுக்கு என இனங்காணப்பட்ட காணிகளை சுவீகரிக்கும் நோக்குடனான நில அளவை செய்யும் பணிகள் நேற்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.