தூத்துக்குடி விமான நிலையத்தில் ‘பாசிச பாஜக அரசு ஒழிக’ என்று குரல் எழுப்பியதால் கைது செய்யப்பட்ட மாணவி சோஃபியாவுக்கு பிணை வழங்கி தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திங்கட்கிழமை காலையில் சென்னையிலிருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பயணம் செய்த நிலையில், விமானத்தில் அவருக்கு சில இருக்கைகள் தள்ளி தூத்துக்குடியைச் சேர்ந்த சோஃபியா என்ற பெண்ணும், அவருடைய பெற்றோரும் பயணம் செய்தனர்.
விமானத்தில் பயணித்த வேளையில் சோஃபியா தன் தாயிடம் பாரதிய ஜனதா கட்சிக்கு அரசைக் கடுமையாக விமர்சித்துப் பேசி வந்ததுடன், விமானத்திலிருந்து இறங்கி விமான நிலையத்தில் நடந்துவரும்போது ‘பாசிச – பா.ஜ.க. அரசு ஒழிக’ என்று குரலெழுப்பியுள்ளார்.
இதற்கு தமிழிசை சவுந்தரராஜனும் அவருடைய ஆதரவாளர்கள் சிலரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததுடன, காவல்துறையிடம் முறையிட்டதையடுத்து கைதுசெய்யப்பட்ட சோஃபியா, புதுக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டார்.
சோஃபியா கைது செய்யப்பட்டதற்கு திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்ததுடன், சமூக வலைதளங்களிலும் இது தொடர்பாக கண்டனங்களும், கேலிகளும் எழுந்தன.
இவ்வாறான நிலையில் சோஃபியாவை பிணையில் விடுவிக்கக்கோரும் மனு இன்று காலையில் தூத்துக்குடி மாவட்ட குற்றவியல் மூன்றாம் நீதிமன்ற நீதிபதி முன்பாக முறையிடப்பட்ட நிலையில், அவர்களை விசாரித்துவிட்டு மதியம் 12 மணிவரை விசாரணைகளை ஒத்திவைத்த நீதிபதி, மீண்டும் 12 மணிக்கு வழக்கு வந்தபோது, சோஃபியாவுக்கு பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.