பிலிப்பீன்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள சிறைச்சாலை ஒன்றிலிருந்து 150இற்கும் அதிகமான கைதிகள் தப்பி ஓடிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கொட்டாபாட்டோ மாநிலத்தின் கிடாபாவான் நகரில் அமைந்துள்ள அந்த சிறைச்சாலையில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் இனம் தெரியாத நபர்களினால் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் சுமார் 100 பேர் வரையில் ஈடுபட்டனர் என்று கூறப்படுகிறது.
இதேவேளை அவர்களின் அந்த தாக்குதல்களுக்கு அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளும் பதில் தாக்குதல் நடாத்தியதாகவும், இதனால் இந்த துப்பாக்கி மோதல் சுமார் இரண்டு மணி நேரங்கள் தொடர்ந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த மோதல்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்த சமையத்தில் அந்த சிறையில் இருந்த 1,511 கைதிகளில் 150 இற்கும் மேற்பட்ட கைதிகள் ஏணிப்பலகையைக் கொண்டு சிறையின் பின்பகுதி வழியாயாகத் தப்பிச் சென்றுள்ளதாக அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணி எனும் கிளர்ச்சிப் படையிலிருந்து பிரிந்து சென்ற குழு அந்தத் தாக்குதலை வழிநடத்தியதாகச் சிறை அதிகாரிகள் கூறுகின்ற போதிலும், தாக்குதல் நடத்தியவர்களின் அடையாளத்தை அதிகாரிகள் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
இதேவேளை தாக்குதல் நடாத்தியவர்களையும், தாக்குதல் இடம்பெற்ற போது சிறையில் இருந்து தப்பி ஓடிய கைதிகளையும் தேடும் நடவடிக்கையில் அந்த நாட்டு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.