இலங்கையின் புதிய அரசியல் சாசனத்தில் மாகாண மற்றும் பிராந்திய மட்டங்களில் இறைமை பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இன்று திங்க்ட்கிழமை மட்டக்களப்பு கரடியனாறு விவசாய பயிற்சி நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அதிகார பகிர்வு என்பது சமஷ்யா அல்லது ஒற்றையாட்சியா என்பது அவற்றின் சொற்பிரயோகத்தில் அன்றி, அதன் உள்ளடக்கத்தில் தான் தங்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா சமஷ்டி முறையிலான நாடு என்ற போதிலும், ஒற்றையாட்சி முறைகளும் இருப்பதாக ஆய்வாளர்களில் ஒரு சாரார் தமது கருத்துக்களை முன் வைத்திருக்கின்றார்கள் என்றும், மற்றுமோர் சாரார் இந்தியா ஒற்றையாட்சி முறையிலான நாடு என்ற போதிலும் சில சமஷ்டி முறையிலான ஒழுங்குகளை கொண்டுள்ளதாக கூறுகின்றார்கள் எனவும் இரா.சம்பந்தன் விளக்கமளித்துள்ளார்.
இதேவேளை ஒட்டு மொத்த ஒடுக்கபப்ட்ட சிறுபான்மைச் சமூகங்களுக்காக போராடுவதற்கு தாம் திடசங்கற்பம் கொள்வதாகவும், யாரும் எவருக்கும் அநீதி இழைப்பதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்றும் தெரிவித்துள்ள அவர், அநீதியால் தமது சமூகம் கூடுதலாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றது என்றும் விபரித்துள்ளார்.
ஒரு புதிய அரசியல் சாசனம் உருவான பின்னர் இலங்கையில் வாழ்கின்ற சமூகங்கள் அனைவரும் அவர்கள் எங்கே வாழ்ந்தாலும் சம உரிமையுடன் சமத்துவமாக வாழவேண்டும் என்பதுவே தமது குறிக்கோள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மாகாண விவசாய அமைச்சர் துரைராஜசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட், மாகாண காணி அமைச்சர் ஆரியவதி கலப்பதி, அவைத் தலைவர் சந்திரதாஸ கலப்பதி, துனை அவைத் தலைவர் பிரன்னா இந்திரகுமார், நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.