புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உலக சாதனை முயற்சியாக இன்று (ஜன.,20) ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டில் மொத்தம் 1353 காளைகள் பங்கேற்று உலக சாதனை படைத்ததாக கின்னஸ் தேர்வு குழு அறிவித்து அதற்கான சான்றிதழ் அளிக்கப்பட்டது.
விராலிமலையில் உலக சாதனைக்காக நடத்தப்படும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் அதிகபட்சமாக 2000 காளைகள், 550 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். இந்த போட்டியை முதல்வர் பழனிசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். அமைச்சர்கள், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ், விஜயபாஸ்கர்,சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
ஜல்லிக்கட்டை துவக்கி வைத்து பேசிய முதல்வர் பழனிசாமி, தமிழர்கள் என்றால் வீரம் என்னும் அளவிற்கு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகள் வரிசையில் விராலிமலையும் இடம்பெறும் அளவிற்கு பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு போட்டு நடத்தப்படுகிறது. அலங்காநல்லூருக்கு இணையாக விராமலை ஜல்லிக்கட்டும் இடம்பெறும். சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதலின் அடிப்படையில் இந்த போட்டி நடக்க உள்ளது. முதல் முறையாக இப்போட்டியில் வீரர்களுக்கும் காப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்றார்.
உலக சாதனைக்காக நடத்தப்படும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியை காண 30,000 பேர் அமரும் வகையில் கேலரிகள் அமைக்கப்பட்டுள்ளன. கின்னஸ் சாதனை மதிப்பீட்டு குழு நிர்வாகிகளும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பலரும் இதில் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஜல்லிக்கட்டில் சிறந்த 3 காளைகள் மற்றும் சிறந்த மாடுபிடி வீரர்கள் 3 பேருக்கு கார்கள், இருசக்கர வாகனங்கள், தங்கம் மற்றும் வெள்ளி காசுகள், பிரிட்ஜ், சைக்கிள் உள்ளிட்டவைகள் பரிசாக வழங்கப்பட உள்ளன. பாதுகாப்பு பணிக்காக 700 க்கும் அதிகமான போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ஜல்லிக்கட்டு போட்டியில் , 2 பேர் காளைகள் முட்டி உயிர் இழந்தனர்.