யாழ் குடாநாட்டை அபிவிருத்தி செய்ய புலம்பெயர் நாடுகளிலுள்ள பொறியியலாளர்கள் தாயகம் திரும்ப வேண்டும் என்று வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யாழ் குடாவை அபிவிருத்தி செய்ய உலக வங்கி 65 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளது எனவும், இந்த நிலையில் வெளிநாடுகளிலுள்ள எமது பொறியியலாளர்கள் இங்கு வந்து பணியாற்ற உடன் முன் வரவேண்டும் என்றும் வட மாகாண முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.
உலக வங்கியின் பிரதிநிதிகளிற்கும் வட மாகாண முதலமைச்சர் தலமையிலான குழுவினருக்கும் இடையில் நேற்று சந்திப்பொன்று நடைபெற்றுள்ள நிலையில், இந்த சந்திப்பினை அடுத்தே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணக் குடாநாட்டிற்குள் உலக வங்கியின் 65 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியில் மேற்கொள்ளப்படவுள்ள பல திட்டங்களிற்குரிய பொறியியலாளர்கள் பற்றாக்குறையாகவுள்ளமையே, அத் திட்டங்களை ஆரம்பிப்பதில் உள்ள ஒரே தடையென உலக வங்கிப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதனால் இவ்வாறு தடையாகவுள்ளதாக தெரிவிக்கப்படும் பொறியியலாளர்கள் எமது பிரதேசத்தில் குறிப்பிட்டளவில் மட்டுமே உள்ளனர் எனவும், அவர்களை இப்பணிக்கு விடுவித்தால் அவர்கள் தற்போது ஆற்றும் பணிகள் பாதிக்கப்படும் அல்லது பகுதியளவில் பணியாற்றினாலும் குறித்த திட்டத்தினை முழுமை செய்ய முடியாத நிலமையே கானப்படும் எனவும் அவர் விபரித்துள்ளார்.
எனவே புலம்பெயர் நாடுகளில் உள்ள எமது உறவுகளில் பலர் இதே பொறியியலாளர்களாக வெளிநாடுகளில் பணி புரிகின்றனர் எனவும், அவர்கள் இங்கு வந்து எமது உறவுகளிற்காக பணியாற்ற உடன் முன் வரவேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
உறவுகள் மீது கரிசணை கொண்ட புலம்பெயர்ந்தவர்களிற்கான ஓர் வாய்ப்பு இது எனவும், இதில் அதிக வருமானத்தினை எதிர்பார்க்காது கிடைக்கும் வருமானத்துடன் தாயக உறவுகளிற்கான ஓர் பணியாக கொண்டு சேவையாற்ற முன் வரவேண்டும் என்றும் முதலமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.