மும்மொழித்திட்டத்தை திணிப்பதன் மூலம் தமிழர்களை உரசிப்பார்க்க வேண்டாம் என மத்திய அரசுக்கு திராவிட முன்னேற்றக்கழகம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்றுஇடம்பெற்ற தி.மு.க. செயற்குழுக்கூட்டத்தில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தியா முழுவதும் தற்போது காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட கல்வி கொள்கை அமுலில் உள்ளது. தமிழகத்தில் இருமொழிக் கொள்கை கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்நிலையில் மத்திய அரசு சார்பில் மும்மொழித்திட்டத்திற்கான புதிய கல்வி கொள்கை குறித்து ஆராய குழு ஒன்று நியமிக்கப்பட்டது.
இது குறித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் இன்று நடைபெற்ற கட்சி செயற்குழுவில் மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழர்களின் உணர்வோடு விளையாட வேண்டாம் என பாரதீய ஜனதா கட்சியைக் கேட்டுக் கொள்வதோடு, இரு மொழிக் கொள்கைக்கு ஆபத்து விளைவிக்கும் எந்த செயலானாலும் திராவிட முன்னேற்றக்கழகம் முன்னின்று எதிர்க்கும் என்பதையும் இக்கூட்டம் உறுதியாக தெரிவித்துக் கொள்கிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக ஹிந்தி கட்டாய மொழியாக்கப்படும் என்று தகவல் வெளியாகி, பல்வேறு மாநிலங்களில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து மத்திய அரசு அனைத்து மாநிலங்களுடனும் கலந்து ஆலோசித்து சுமூக தீர்வு வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது