மேகதாது அணையை கட்டும் கோரிக்கையை முன்வைத்து தமிழக தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
தற்போது கர்நாடகாவில் அதிக மழை பெய்திருப்பதால் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கூடுதல் நீர் திறந்து விடப்பட்டுள்ளதுடன், மேலதிக நீர் கடலுக்கு திறந்து விடும் நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையிலேயே தமிழக அரசுடன் பேச்சு நடாத்த உள்ளதாகவும், காவிரி நீர் கடலில் கலப்பதை தடுப்பதற்கான முயற்சியாக தமிழகத் தலைவர்கள், விவசாயிகளை சந்தித்து பேசவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
காவிரியின் குறுக்கே கர்நாடகாவில் ஹேமாவதி, ஹாரங்கி, கபினி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய 4 அணைகள் ஏற்கனவே உள்ள நிலையில், காவிரியின் குறுக்கே தமிழக எல்லையில் இருந்து 60 கிலோ மீட்டர் தூரத்தில் மேகதாது என்ற இடத்தில் புதிய அணை ஒன்றையும் கட்டுவதற்கு கர்நாடக அரசு ஏற்கனவே திட்டமிட்டுள்ளது.
ஆனால் கர்நாடக அரசின் இந்த திட்டத்திற்கு தமிழக அரசு எதிர்ப்புத் தெரிவித்து வருவதனால் அந்த திட்டத்தை முன்னெடுப்பதற்கு மத்திய அரசின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள முடியா நிலையில் அதனைத் தொட முடியாதுள்ளமை குறிப்பிடத்தக்கது.