யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்ற வன்முறைகளுடன் தொடர்புபட்டுள்ள பலர், தலைமறைவாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
வடமாகாணத்துக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள மூத்த காவற்துறை மா அதிபர் இதனைக் கூறியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில், அவற்றை கட்டுப்படுத்துவதற்காக சுற்றிவளைப்பு தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும், இதற்காக யாழ்ப்பாண காவற்துறை பிரதேசத்துக்கு உட்பட்ட காவற்துறை அலுவலர்களின் விடுமுறைகள் நீக்கம் செய்யப்பட்டு, சிறப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான வன்முறைகள் தொடர்பில் இதுவரையில் 2 முக்கிய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பலரிடம் வாக்குமூலம் பெறப்பட்டிருப்பதாகவும், எனினும் அண்மைக்காலமாக இடம்பெற்ற வன்முறைகளுடன் தொடர்புபட்டுள்ள பலர் தலைமறைவாகிவிட்டதாகவும் வடக்கிற்கு பொறுப்பான மூத்த காவற்துறை மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
2009ஆம் ஆண்டின் பின்னர் வடக்கில் இவ்வாறன வன்முறைக் கலாச்சாரம் சடுதியாக அதிகரித்த நிலையில், இவற்றுக்கு பின்னணியில் சிறிலங்கா படைகளும் காவல்துறையினருமே செயற்பட்டு வருவதாக பல்வேறு தரப்பாலும் குற்றச்சாட்டுக்ள சுமத்தப்பட்டு வந்த நிலையிலேயே, வன்முறைகளுடன் தொடர்புபட்டுள்ள பலர் தலைமறைவாகிவிட்டதாக தற்போது காவல்துறை தெரிவித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.