இலங்கையில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றிப்பெற்ற பின்னர், அரசாங்கம் வீட்டுக்கு அனுப்பப்படும் எனவும், மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியினர் ஆட்சியமைக்கும் சந்தர்ப்பம் வந்தால், சிறீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட எந்தவொரு கட்சியுடனும் இணைந்து ஆட்சியமைக்கப்போவதில்லை எனவும் ஒன்றிணைந்த எதிரணி எடுத்துரைத்துள்ளது.
கூட்டு எதிரணியின் ஊடக சந்திப்பு, பொரளையில் உள்ள என்.எம்.பேரேரா மத்திய நிலையத்தில் இடம்பெற்றபோது, அந்த அணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தினேஸ் குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
நாளையநாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் தோற்கடிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஒன்றிணைந்த எதிரணியின் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, நாளையநாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் வெளியேறும் எனவும், நாளை மறுதினம் வியாழக்கிழமை புதிய அரசாங்கம் பதவியேற்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
முதலில் பிரதமரை பதவி நீக்க வேண்டும் எனவும், அதன் பின்னர் அரசாங்கம் தானாக பதவியிழக்கும் என்றும் அவர் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளார்.
மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளதுடன், நிதி நிறுவனங்கள் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளன எனவும், நாட்டின் பல பாகங்களிலும் வேலை நிறுத்தங்கள் இடம்பெறுவதுடன், பாதாள உலகத் தலைவர்கள் மீண்டும் தலைத்தூக்க ஆரம்பித்துள்ளனர் எனவும், இதுவே ரணில் விக்கிரமசிங்க தலையிலான அரசாங்கத்தின் பெறுபேறு என்றும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.