ரொரன்ரோவில் தீவிரமடைந்துவரும் துப்பாக்கி வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்காக ஒன்ராறியோ மாகாண அரசின் சார்பில் 25 மில்லியன் டொலர்களை வழங்குவதாக முதல்வர் டக் ஃபோர்ட் அறிவித்துள்ளார்.
இன்று காலை Queen’s Parkஇல் வைத்து இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ள அவர், எதிர்வரும் நான்கு ஆண்டுகளில் இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.
ரொரன்ரோவில் மோசமடைந்துள்ள துப்பாக்கி வன்முறைகள் காரணமாக பெருமளவான மக்கள் பயத்தின் மத்தியில் வாழும் நிலை தோன்றியுள்ளது எனவும், அதேவேளை பெருமளவான காவல்துறை உத்தியோகத்தர்கள் போதிய வளங்கள் இன்றி தமது பணியை மேற்கொள்ளவேண்டிய நிலை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதனை ஈடுசெய்யும் வகையிலேயே இந்த 25 மில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளதாகவும், அதில் 18 மில்லியன் டொலர்கள் நேரடியாக ரொரன்ரோ காவல்துறைக்கு வழங்கப்படும் எனவும், மிகுதி தொகை ரொரன்ரோவில் உள்ள நீதிமன்றங்களின் சட்டத்துறை பணியாளர்களுக்காக வழங்கப்படும் என்றும் அவர் விபரித்துள்ளார்.
குறிப்பாக அந்த நிதியானது, குற்றச் செயல்களின் பின்னர் கைது செய்யப்படுவோர் பிணைகளில் வெளியே வராது, தொடர்ந்து சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தும் சட்டத்துறைப் பணிகளுக்காக பயன்படுத்தப்படும் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
அந்த வகையிலேயே இன்று இந்த நிதியை வழங்குவதாகவும், இதற்கு சமமான நிதிப் பங்களிப்பினை மேற்கொள்ளுமாறு மத்திய அரசிடமும், நகர நிர்வாகத்திடமும் வேண்டுகோள் விடுப்பதாகவும் டக் ஃபோர்ட் மேலும் தெரிவித்துள்ளார்.