வடக்கில் செயற்படுவதாக கூறப்படும் ஆவா குழுவினால், இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று சிறிலங்கா இராணுவத்தின் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்புக்கு எந்த வகையான ஆபத்து ஏற்பட்டாலும் அதனைச் சமாளிப்பதற்கான வசதிகளுடன் சிறிலங்கா இராணுவம் உள்ளது எனவும், இராணுவ இயந்திரம் பலமாக உள்ளது என்றும், புலனாய்வு வலையமைப்பு முழுமையாகச் செயற்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே ஆவா குழுவிடம் இருந்தோ, அல்லது வேறெந்த குழுவிடம் இருந்தோ அச்சுறுத்தல் ஏற்படும் சாத்தியங்கள் இல்லை என்றும், பொதுமக்களுக்கு தவறான கருத்தை ஏற்படுத்தும் வகையில், வடக்கிலுள்ள மக்களின் காணிகள் திரும்ப ஒப்படைக்கப்படுவது தொடர்பாக சமூக ஊடகங்களில், பொய்யான செய்திகள் வெளியிடப்படுகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.
வடக்கில் சிறிலங்கா இராணுவம் சில காணிகளை கைப்பற்றி வைத்திருந்தாலும், அவை முன்னர் பொதுமக்களுக்குச் சொந்தமானவையாக இருந்தன எனவும், அந்தக் காணிகளை அவர்களுக்கு விடுவிக்க இராணுவம் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கும் என்றும், வடக்கு கிழக்கு மாகாணங்களில் அவ்வாறு விடுவிக்கப்படும் பொதுமக்களின் காணிகளால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு விடுவிக்கப்படும் காணிகள் முழுமையான பரிசோதனைக்குப் பின்னரே விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை இராணுவம் புரிந்து கொண்டு, அரசு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்காது என்று கருதப்படும் காணிகளே விடுவிக்கப்படுகிறது என்றும் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.