முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

தமிழ் மக்களின் விகிதாசாரத்தை குறைப்பதே அரசாங்கத்தின் நோக்கம்

1278

வடக்கில் சிங்கள மக்களை குடியேற்றி, தமிழ் மக்களின் விகிதாசாரத்தை குறைப்பதே இலங்கை அரசாங்கத்தின் நோக்கம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் வவுனியா அலுவலகத்தை இன்று திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

வடக்கு கிழக்கில் பௌத்த மேலாதிக்கத்தை கொண்டு வருவதற்கே அரசு முயற்சிப்பதாகவும், கொக்கிளாயில் தனியார் காணியில் பௌத்த விஹாரை அமைக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கள குடியேற்றங்கள் ஊடாக வடக்கில் 30 வீதம் சிங்கள மக்களை குடியேற்றி, தமிழர்களின் விகிதாசாரத்தை குறைப்பதே அரசின் முக்கிய நோக்கம் எனவும், இதற்காகவே சிங்கள அரசாங்க அதிபர்கள் வடபகுதியில் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் அவர் விபரித்துள்ளார்.

இலங்கையில் இரண்டு இலட்சம் இராணுவத்தினர் உள்ள நிலையில், இவர்களில் ஒன்றரை இலட்சம் இராணுவத்தினர் வடக்கில் உள்ளனர் எனவும், இவர்கள் வடபகுதி எங்கும் பௌத்த விஹாரைகளை அமைத்து வருகின்றனர் எனவும் அவர் சாடியுள்ளார்.

இந்த நிலையில் சமஷ்டி அரசியல் அமைப்பு முறை வந்தாலேயே தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் எனவும், அத்துடன் வடக்கு கிழக்கில் மக்கள் ஒன்றிணைந்து அபிவிருத்தியும் அடைவார்கள் என்றும் அவர் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளார்.

இதனை கூறும்போது ஐக்கிய தேசியக்கட்சியின் அமைச்சர்களும், சுதந்திர கட்சியினரும், மக்கள் விடுதலை முன்னணியினரும், தீவிரவாத போக்குடைய சிங்களவர்களும் வடக்கு மக்கள் இனவாதமாக செயற்படுவதாக கூறுவதனையும் சுட்டிக்காட்டியுள்ள அவர், சமஷ்டியை கோருவதில் எங்கு இனவாதம் உள்ளது என்பது தெரியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் தென் பகுதியில் எழுந்துள்ள இனவாதத்தையும், கூச்சல்களையும் தடுத்து நிறுத்துவதற்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இதுவரையில் தீர்த்து வைக்கப்படாமல் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதுடன், தமிழ் மக்களின் உரிமைகள் புதிய அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காகவே கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் ´எழுக தமிழ்´ பேரணி நடத்தப்பட்டதாகவும், அதனை இனவாதமாகத் திரித்துக் கூறி தெற்கில் இனவாதம் தலைதூக்கியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்க அமைச்சர்களும் அரசியல்வாதிகளும் தமிழருக்கு எதிராக இனவாதக் கருத்துக்களைக் கூறி வருவதைக் கண்டிக்காமல், சனாதிபதியும், பிரதமரும் மௌனம் காத்திருப்பதாகவும், இந்த நிலைமை தொடருமானால் புதிய அரசியலமைப்பில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாமல் போய்விடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிங்கள மக்களுக்கு எதிராகத் தமிழ் மக்களோ, எழுக தமிழ் நிகழ்வோ, இனவாத கருத்துக்களையோ, மதவாத கருத்துக்களையோ முன்வைக்கவில்லை என்றும், தனியார் காணிகளிலும், இந்து ஆலய காணிகளிலும், அதே நேரம் சிங்கள மக்கள் இல்லாத இடங்களிலும் அமைக்கப்படும் புத்தர் சிலைகளையும், பௌத்த விகாரைகளையும் அகற்ற வேண்டும் என்பதே தமிழ் மக்களின் கோரிக்கையாகும் என்றும் அவர் விபரித்துள்ளார்.

இதனை இனவாதமாகச் சித்தரித்து தெற்கில் எழுந்துள்ள இனவாதப் போக்கையும் கூச்சல்களையும் அரசாங்கம் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஒற்றையாட்சிக்குள்தான் தீர்வென்று அரசாங்கம் கூறிவரும் நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசுடன் பேச வேண்டும் எனவும், அந்தப் பேச்சுவார்த்தை மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துடன் நடைபெறவேண்டும் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிய போதிலும், அதுவும் நடைபெறவில்லை என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *