யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை வழக்கின் இறுதித் தீர்ப்பு எதிர்வரும் 27 ஆம் திகதி காலை 9 மணிக்கு வழங்கப்படுமென யாழ்.மேல் நீதிமன்றில் அமைக்கப்பட்டுள்ள ட்ரயல் அட்பார் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மாணவி வித்தியாவின் கூட்டு பாலியல் வல்லுறவு படுகொலை வழக்கானது யாழ்.மேல் நீதிமன்றில் அமைக்கப்பட்டுள்ள ட்ரயல் அட்பார் நீதிமன்றில் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் மற்றும் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோரை உள்ளடக்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் இடம்பெற்று வருகின்றது.
கடந்த ஜுன்மாதம் 28 ஆம் திகதி முதல் இடம்பெற்ற வழக்கு விசாரணைகள் இடையிடையே ஒத்திவைக்கப்பட்ட போதிலும் இது வரை 17 வழக்குகள் இடம்பெற்றுள்ளன.
44 அரச தரப்பு சாட்சியங்கள் முன்வைக்கப்பட்டதுடன் 27 சான்றுப்பொருட்களும் அரச தரப்பால் முன்வைக்கப்பட்டுள்ளன. 9 எதிரிகளும் சாட்சிக் கூண்டில் நின்று சத்தியப்பிரமாணம் செய்து சாட்சியமளித்தனர்.
சுவிஸ் குமார் சார்பில் அவரது மனைவி சாட்சியமளிக்கு மன்றுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.5 ஆவது எதிரிகள் சார்பில் சட்ட வைத்திய அதிகாரி மயூரதன் அழைக்கப்பட்டிருந்தார்.
இவ்வாறு வழக்குத் தொடுநர் தரப்பு, எதிரிதரப்பு தொகுப்புரைகள் இன்றும் நேற்றும் மன்றில் இடம்பெற்று வந்தன.
இதன் நிறைவில் எதிர்வரும் 27 ஆம் திகதி இவ் வழக்கின் இறுதித் தீர்ப்பு அறிவிக்கப்படுமென மன்று உத்தரவிட்டது. இதேவேளை, அன்றைய தினம் கொலைசெய்யப்பட்ட மாணவி வித்தியாவின் தாயாரையும் நீதிமன்றில் ஆஜராகுமாறும் அறிவுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.