வீட்டு விலை மற்றும் வாடகை அதிகரிப்பு காரணமாக பெரும்பாலான ரொரன்ரோ மக்கள் ரொரன்ரோ பெரும்பாகத்தை வி்ட்டு வெளியேற திட்டமிட்டு வருவதனை அண்மைய கருத்துக் கணிப்பு முடிவுகள் காட்டுகின்றன.
குறிப்பாக ரொரன்ரோவில் வீடுகளை அல்லது அறைகளை வாடகைக்கு எடுத்து தங்கியிருப்போரில், 47 சதவீதம் பேர், தாங்கள் ரொரன்ரோ பெரும்பாகத்தை விட்டுவெளியேறுவது தொடர்பில் மிகவும் தீவிரமாக சிந்தித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
ரொரன்ரோ பெரும்பாகம் முழுவதிலும் உள்ள 831 பேரிடம் நடாத்தப்பட்டுள்ள இந்த ஆய்வில், ரொரன்ரோவை விட்டு வெளியேறப் போவதாக தெரிவித்துள்ளோரில் 58 சதவீதமானோர் 18 வயதுக்கும் 34 வயதுக்கும் இடைப்பட்டோர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை தற்போது அதிகரித்துள்ள வீட்டு விலைகள் எதிர்வரும் நான்கு ஆண்டுகளில் சிறிதளவேனும் வீழ்ச்சியைக் காணும் எனவும், இந்த கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டோரில் 52 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
ரொரன்ரோவில் வதிவிட செலவீனம் அதிகரித்துச் செல்லும் இந்த விடத்தில் அரசாங்கம் தலையிட்டு, அனைவரும் தங்கும் இடங்களை பெற்றுக் கொள்ளக்கூடிய வசதிகளை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கருத்தினை, இந்தக் கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டோரில் 75 சதவீதம் பேர் ஆதரித்துள்ளனர்.