வேலூர் சிறைச்சாலையில் இருந்து நளினி, முருகன், பேரறிவாளன் உட்பட 200 ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தமிழக உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்ட்டி, தமிழகத்தின் 9 மத்திய சிறை அதிகாரிகளுக்கு சில நாட்களின் முன்னர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி வைத்திருந்தார்.
10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை நல்லொழுக்கம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டதுடன், அதற்கு தகுதியானவர்களின் பட்டியலை தயாரித்து வழங்கும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள இந்த பட்டியலில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறைச்சாலையில் 26 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்து வரும் முருகன், பேரறிவாளன், சாந்தன், பெண்கள் சிறையில் உள்ள நளினி ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.