2020ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் நான் போட்டியிடவில்லை என்று முன்னாள் அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் அறிவித்துள்ளார்.
ஹிலாரி கிளிண்டன் அமெரிக்க அரசியலில் பிரபலமானவர். அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவர். அமெரிக்க செனட் சபை உறுப்பினராகவும் இருந்துள்ளார். ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக தேர்வான முதல் பெண்மணியும் ஆவார்.
கடந்த 2016ம் ஆண்டு குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளரான டிரம்ப்பை எதிர்த்துப் போட்டியிட்டார். இவர் தேர்தலில் வெற்றி பெற்று முதல் பெண் அதிபர் ஆவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார்.
அடுத்த ஆண்டு தேர்தலுக்காக அமெரிக்கா தயாராகி வரும் நிலையில் அமெரிக்க ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த ஹிலாரி, நான் எதை நம்புகிறேனோ அதற்காகத் தொடர்ந்து பணியாற்றுவேன். அதுகுறித்துப் பேசுவேன்.
நாட்டில் இப்போது நடக்கும் சம்பவங்கள் என்னை மிகுந்த சங்கடத்துக்கு ஆளாக்குகின்றன. 2020 அதிபர் தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை. ஆனால் அதற்காக எங்கும் போய்விட மாட்டேன்.
ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர்களாகப் போட்டியிட எண்ணுபவர்களிடம் பேசி வருகிறேன் என்று ஹிலாரி கிளிண்டன் தெரிவித்தார்.