ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து அகிம்சை வழியில் உணவொறுப்புப் போராட்டம் செய்து வீர காவியமான தியாகி லெப். கேணல் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு இன்று சனிக்கிழமை காலை நல்லூரில் தியாகி திலீபன் நினைவுத் தூபி அமைந்திருந்த இடத்திலும் இடம்பெற்றது.
தியாகி திலீபன் தன் உணவொறுப்புப் போராட்டத்தை ஆரம்பித்த நேரத்தில் நல்லூரில் தியாகி திலீபன் நினைவுத் தூபி அமைந்திருந்த இடத்தில் நிகழ்வு ஆரம்பமாகியது.
வடமாகாண சபையின் அவைத் தலைவர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரமுகர்கள், சனநாயக போராளிகள் கட்சியினர், முன்னாள் போராளிகள், மாவீரர், போராளிகள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் உட்பட பெருமளவானோர் நிகழ்வில் கலந்து கொண்டு, ஈகைச் சுடர் ஏற்றி, மலர் சூட்டி அகவணக்கம் செலுத்தியுள்ளனர்.
இதேவேளை இந்திய அமைதிப் படைகளுக்கு எதிராக ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து அகிம்சை வழியில் உணவொறுப்புப் போராட்டம் செய்து வீர காவியமான தியாகி லெப். கேணல் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு இன்று 15 ஆம் நாள் சனிக்கிழமை காலை யாழ். பல்கலைக்கழகத்திலும் மிகவும் உணர்வு பூர்வமாக இடம்பெற்றது.
தியாகி திலீபன் தன் உணவொறுப்புப் போராட்டத்தை ஆரம்பித்த நேரத்தில், பல்கலைக்கழகத்தில் நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பமாகியது.
இதன்போது பல்கலைக்கழகத் துணைவேந்தர், விரிவுரையாளர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட பெருமளவானோர் நிகழ்வில் கலந்து கொண்டு, ஈகைச் சுடரேற்றி, மலர் சூடி அமைதி வணக்கம் செலுத்தியுள்ளனர்.