வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன்னைச் சந்திப்பதற்காக தென்கொரிய சனாதிபதி மூன் ஜே இன், நாளை செவ்வாய்க்கிழமை வடகொரியாவிற்கு பயணிக்கவுள்ளதாக தென்கொரிய சனாதிபதியின் செயலாளர் இம் ஜொங் சியொக் தெரித்துள்ளார்.
தென்கொரிய அதிபர் வடகொரியாவின் பியாங்யொங் நகர அனைத்துலக வானூர்தி நிலையத்தை அந்நாட்டு நேரப்படி நாளை காலை 10 மணியளவில் சென்றடையவுள்ளதாக, தென்கொரிய தலைநகரம் சியொலில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களின் சந்திப்பின் போது சனாதிபதியின் செயலாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.
குறித்த உத்தியோகபூர்வ பயணத்தின் போது, வடகொரியாவின் ஏவுகணை பரிசோதனைகளை முற்றாக நிறுத்தல் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அமெரிக்க சனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வேண்டுகோளிற்கிணங்க முன்னெடுக்கப்படவுள்ள அமெரிக்கா-வடகொரியா இரண்டாம் கட்ட உச்சிமாநாட்டில், தென்கொரியத் தலைவர் பிரதான இடைப் பேச்சாளராக செயற்பட வடகொரியத் தலைவர் கிம்மின் அனுமதியினைப் பெறும் நோக்கிலும் இந்த பயணம் அமையுமென தென்கொரிய சனாதிபதியின் செயலாளர் விபரித்துள்ளார்.
இரண்டு கொரிய எல்லையைத் தாண்டி பியாங்யோங் செல்லும் தென் கொரிய சனாதிபதியின் இந்த பயணமானது, கொரியப் போரிற்குப் பின்னர் முன்னெடுக்கப்படும் மூன்றாவது பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.