சிறிலங்கா அரசால் தமிழ் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி வேண்டியும், மனித உரிமை மீறல்களுக்கு நீதி கோரியும், யாழ்ப்பாணத்தில் இன்று தீப்பந்த பேரணி நடத்தப்பட்டுள்ளது.
அனைத்துலக மகளிர் தினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கில் உள்ள பொது அமைப்புக்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் இந்த தீப்பந்த பேரணி இடம்பெற்றுள்ளது.
இன்று முற்பகல் 11 மணியளவில், நல்லூர் ஆலய பின் வீதியில் உள்ள, உணவு தவிர்ப்புப் போராட்ட களத்தில் ஆரம்பமாகிய இந்தப் பேரணி நாவலர் வீதியில் உள்ள ஐ.நா அலுவலகம் வரை சென்று நிறைவடைந்துள்ளது.
நீதிக்காக போராடும் இனத்தின் கோரிக்கைகளை ஐ.நா கவனத்தில் எடுத்து செயற்பட வேண்டும் என வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த பேரணியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.