அமெரிக்க தலைநகர் வோசிங்டனுக்கு சென்றுள்ள கனேடிய வெளியுறவு அமைச்சர் கிறிஸ்டியா ஃபிறீலான்ட், NAFTA எனப்படும் வடஅமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்பாட்டில் கனடாவின் பங்கேற்பினை உறுதிப்படுத்தும் வகையிலான பேச்சுக்களை மீண்டும் ஆரம்பித்துள்ளார்.
நேற்று மீண்டும் வோசிங்டனைச் சென்றடைந்துள்ள அவர், NAFTA பேச்சுக்களில் கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே தோன்றியுள்ள இடைவெளியை சீர்செய்யும் முயற்சிகளில் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது.
கனடா, அமெரிக்க, மெக்சிக்கோ ஆகிய நாடுகளுக்கு இடையே மிக நீண்டகாலமாக நடப்பில் இருந்து வந்த இந்த உடன்படிக்கை, புதிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தின் கீழ், மீள் பரிசீலனைக்கு உட்படுத்தப்படும் நிர்ப்பந்தத்தை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது குறித்த பேச்சுக்கள் கடந்த பல மாதங்களாகவே இடம்பெற்றுவரும் நிலையில், அமெரிக்காவும், மெக்சிக்கோவும் தமக்கிடையே தனிப்பட்ட ரீதியில் சில இணக்கப்பாட்டினை ஏற்படுத்திக் கொண்டுள்ளன.
இவ்வாறான நிலையிலேயே, இந்த உடன்பாட்டின்கீழ் கனடாவும் தொடர்ந்து இருக்க வேண்டும் என்ற நிலையினைத் தக்கவைத்துக் கொள்ளும் வகையில், பேச்சுக்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கனடாவும் இதில் பங்காளியாக இருக்க வேண்டும் என்று தாமும் விரும்புகின்ற போதிலும், அதற்கான முடிவினை மேற்கொள்வதற்கு போதிய கால அவகாசம் இல்லை எனவும், விரைவில் இறுதி முடிவுக்கு வந்தாகவேண்டிய நிர்ப்பந்தம் உள்ளதாகவும் அமெரிக்க தரப்பில் கூறப்பட்டு வருகிறது.
இவ்வாறான நிலையிலேயே அமெரிக்கா சென்றுள்ள கிறிஸ்டியா ஃபிறீலான்ட், இன்று அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகளுடனான பேச்சுக்களில் ஈடுபட்டு இந்த விவகாரத்திற்கு ஒரு தீர்வினைக் காண்பதற்கான முயற்சிகளில் இடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.