அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், ட்ரம்பிற்கு உதவும் வகையிலும், ஜோ பைடனை தோற்கடிக்கவும், ரஷ்யா தலையிட்டுள்ளதாக, அமெரிக்க புலனாய்வு அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் அமெரிக்காவிற்கு உள்ளேயே இருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் தேசிய புலனாய்வு இயக்குனர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், அதிகாரிகள் மற்றும் ட்ரம்பிற்கு நெருக்கமான மற்றவர்கள் மூலம் பிரசாரத்தில் பைடன் குறித்து தவறான தகவல்களை ரஷ்யா புகுத்த முயன்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பைடன் மீது தவறான, நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுக்களை, டிரம்ப் ஆதரவாளர்கள் மூலம் பரப்ப புடினும் அவரது நிர்வாகமும் முயன்றுள்ளது என்றும், அதில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவிற்குள் குழப்பத்தையும் முரண்பாடுகளையும் உருவாக்குவதற்கான ரஷ்யாவின் முயற்சிகளே இது என்றும், அந்த புலனாய்வு அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.