கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதியான கனகசபை தேவதாசன் என்பவர், தனக்கு பிணை அனுமதி பெற ஆவன செய்யுமாறு கோரி உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
அவர், நேற்று ஆறாம் திகதி முதல் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார் என அவரது உறவுகளால் குரலற்றவர்களின் குரல் அமைப்புக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
அவர், தனது மேன்முறையீட்டு வழக்குகள் தொடர்பாகவும் தனது உடல் நிலை தொடர்பாகவும் குறிப்பிட்டு கடந்த டிசம்பர் மாதம் 17ஆம் திகதி சிறைச்சாலை ஆணையாளருக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.
அத்துடன், தான் நிரபராதி என நிரூபிக்கும் வாய்ப்பும் மேலதிக வைத்திய சிகிச்சையும் இல்லாமல் தான் தொடர்ந்தும் சிறைக்குள் அடைபட்டிருப்பதில் அர்த்தமில்லை என குறிப்பிட்டுள்ளார் .
எனவே, மேற்படி தனது கோரிக்கையை வலியுறுத்தி நேற்றுமுதல் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை சிறையில் இருந்து ஆரம்பித்துள்ளார் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.