வட மாகாணத்தில் காணிகளை விடுவிப்பதற்காக அரசுத் தலைவர் மைத்திரிபால சிரிசேன இன்று முள்ளியவளை சென்றபோது அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து கவனஈர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து வழங்கிய உறுதிமொழியை அவர் நிறைவேற்றத் தவறிவிட்டதைச் சுட்டிக்காட்டும் பதாகைகளுடன் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் முள்ளிவளையில் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
முள்ளிவளை வித்தியானந்தா கல்லூரியில் இன்று நடைபெற்ற நிகழ்வில், தேசிய போதைப் பொருள் எதிர்ப்பு வாரத்தை மைத்திரி ஆரம்பித்து வைத்தார்.
இதன் போது வடக்கில் படையினரின் ஆக்கிரமிப்பில் இருந்;;;த 1201 ஏக்கர் காணிகளை விடுவிக்கும் அறிவிப்பையும் அவர் அங்கு வெளியிட்டார்.
இதன் பிரகாரம் யாழப்பாணத்தில் 44.6 ஏக்கரும், முல்லைத் தீவில் 119.79 ஏக்கரும், கிளிநொச்சியில் 485 ஏக்கரும், மன்னாரில் 504.5 ஏக்கர் மற்றும் வவுனியாவில் 54.38 ஏக்கர் காணியும் விடுவிக்கப்படுவதாக அறிவி;க்கப்பட்டுள்ளது.
காணாமல் போனவர்கள் விடயத்தில் வாக்குறுதியை நிறைவேற்ற தவறிய ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த உறவுகளின் போராட்டத்திற்கு பொலிஸார் தடை ஏற்படுத்தியுள்ளனர்.
கிளிநொச்சி, அறிவியல்நகர் யாழ். பல்கலைகழகத்தின் விவசாய பீட வளாகத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற மர நடுகை நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துக் கொண்டார்.
இதன்போது, ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள் பல்கலைகழக வளாகத்திற்கு சென்றிருந்தனர்.
ஆனால், உறவுகளை பல்கலைக்கழக வளாகத்தை நெருங்கவிடாது பொலிஸார் வீதியிலேயே தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து வீதியில் தடுத்து நிறுத்தப்பட்ட உறவுகள், நூறு நாட்களுக்குள் தீர்வினை பெற்றுத் தருவதாக கூறிய ஜனாதிபதி அதனை நிறைவேற்றவில்லை என கவலை வெளியிட்டனர்.
தமது உறவுகள் குறித்த உரிய பதிலை வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் கிளிநொச்சியில் தொடர்ந்து 701ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.