மியான்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது அரசுப்படையினர் இன்று நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 38 போராட்டக்காரர்கள் உயிரிழந்திருப்பதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள மியான்மாருக்கான ஐ.நாவின் சிறப்புத் தூதுவர் கிறிஸ்ரின் பேர்கனர் (Christine Burgener) இராணுவப் புரட்சிக்குப் பின்னர் இன்றைய நாள் மிகமோசமான இரத்தக்களரியான நாளாக அமைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்று மட்டும், 38 போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், இதுவரை 50இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் ஐ.நா தூதுவர் மேலும் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களில் 4 பேர் சிறுவர்கள் என்று ஐ.நா சிறுவர் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இராணுவ ஆட்சிக்கு எதிராக மியான்மரின் முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் இன்று வீதியில் இறங்கி போராட்டம் நடத்திய போதே, இராணுவத்தினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தியதாக செய்திகள் கூறுகின்றன.