இந்தியாவிடம் இருந்து பெறப்பட்ட 400 மில்லியன் டொலர் வெளிநாட்டு நாணயக் கடன்களை உரிய காலத்தில் திருப்பிச் செலுத்தியுள்ளதாக சிறிலங்கா மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை 24ஆம் திகதி 3 மாத தவணை அடிப்படையில் இந்தியாவின் றிசேர்வ் வங்கியிடம் இருந்து, 400 மில்லியன் டொலர் வெளிநாட்டு நாணயப் பரிமாற்றக் கடன் பெறப்பட்டது.
பின்னர், இந்த கடன் தவணைக்காலம் 3 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டு, பெப்ரவரி 1ஆம் நாள் இந்தக் கடனை மீளச் செலுத்த வேண்டியிருந்த நிலையில், அதற்கு மேலதிக கால அவகாசத்தைப் பெற்றுக் கொள்ளும் முயற்சிகள் சிறிலங்கா மத்திய வங்கி மற்றும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்த நிலையில், கிழக்கு கொள்கலன் முனைய விவகாரத்தில் இந்தியாவுக்கு அதிர்ச்சி தரும் முடிவு சிறிலங்கா அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டதை அடுத்து, குறித்த காலத்துக்குள் 400 மில்லியன் டொலர் கடனை திருப்பிச் செலுத்துமாறு இந்தியா அழுத்தம் கொடுத்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், சிறிலங்கா மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இந்தியாவிடம் பெறப்பட்ட 400 மில்லியன் டொலர் வெளிநாட்டு நாணய மாற்று கடன் உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து இந்தியாவிடம் இருந்து சிறப்பான கோரிக்கைகள் எதுவும் வரவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.