கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பாக, புதுடெல்லியுடன் பேச்சுக்களை நடத்தவுள்ளதாக, சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கிழக்கு, முனையத்தை இந்தியா, ஜப்பானின் பங்களிப்புடன் அபிவிருத்தி செய்யும் உடன்பாட்டுக்கு முரணாக, அதனை முழுமையாக சிறிலங்காவே அபிவிருத்தி செய்யும் என்று அமைச்சரவைக் கூட்டத்தில் நேற்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கருத்து வெளியிட்டுள்ள துறைமுகங்கள் கப்பல்துறை அமைச்சர், றோகித அபேகுணவர்த்தன, மேற்கு முனையத் திட்டம் தொடர்பாக இந்தியாவுடன் கலந்துரையாடுவதற்கு, அமைச்சரவை உப குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, இன்று கொழும்பில் நடந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அஅமைச்சர் ரமேஷ் பத்திரன, இந்தியாவின் நெருங்கிய உறவை சிறிலங்கா மதிக்கிறது என்றும், கிழக்கு முனைய விவகாரம் குறித்து இந்தியாவுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.
அதேவேளை செய்தியாளர் சந்திப்பில் கருந்து வெளியிட்ட உதய கம்மன்பில, கிழக்கு முனையம் சிறிலங்காவுக்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது என்பதாலேயே, முழுமையாக அதனை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடிவெடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.