முக்கிய செய்திகள்

இறுதிக் கட்டபோர் உயிரிழப்புகள் தொடர்பில் இலங்கை அரசு பொறுப்புக் கூற வேண்டும் என்று ஐ.நா வலியுறுத்தியுள்ளது

835

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக் கட்டத்தில் பொது மக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டியது அவசியமாகும் என்று ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.

இலங்கை சனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான இலங்கை அரசாங்கம் தனது பொறுப்புக்கூறல் தொடர்பான வாக்குறுதிகளை காப்பாற்றும் என்று நம்புகிறோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற புலமைப் பரிசில் ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலின் போது கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா இராணுவத்தினர் மீது சுமத்தப்பட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுக்களை ஐ.நா. மனித உரிமை பேரவை கைவிட வேண்டும் என்று சனாதிபதி மைத்திரிபால சிறிசேன சில நாட்களுக்கு முன்னர் குறிப்பிட்டிருந்த நிலையில், இது தொடர்பில் ஐ.நா.வின் நிலைப்பாடு என்ன என்று வினவியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கை அரசாங்கம் போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்கள், உயிரிழப்புகள் தொடர்பில் தனது பொறுப்புக்கூறலில் இருந்து விலக முடியாது எனவும், சிறிசேன அரசாங்கம் இது தொடர்பான விடயத்தில் ஐ.நா.வுக்கு அளித்த வாக்குறுதிகளை காப்பாற்றும் என்று நம்புவதாகவும், இந்த விடயமாக தாங்கள் தொடர்ந்தும் இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 73 ஆவது பொதுச் சபைக் கூட்ட விவாதம் எதிர்வரும் செவ்வாய்க் கிழமை ஆரம்பமாகிற நிலையில், இதன் முதல் நாளில் இலங்கை சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *