இலங்கைத் தமிழர் வாழ்வைப் புரட்டிப் போட்ட, மறக்கவோ – மன்னிக்கவோ முடியாத, தமிழர் வாழ்வில் குருதித்துயர் படிந்த கொடுந்துயர் நாளான கறுப்பு யூலை இன்று நினைவுகூரப்படுகிறது.
35 ஆண்டுகளுக்கு முன்னர் இதேநாளில் சிங்களப் பேரினவாதிகள் ஆடிய கோரத் தாண்டவத்தில் சிக்குண்டு தமிழினம் சின்னாபின்னமாகி, வரலாற்றில் ‘ஆடிக் கலவரமாக’ அடையாளப்படுத்தப்பட்ட கறுப்பு நாள் இன்றாகும்.
1983ஆம் ஆண்டு யூலை மாதம் 23ஆம் நாள் வெடித்த இந்த இனக கலவரத்தின்போது, தென்பகுதியில் வாழ்ந்த தமிழ் மக்கள் துரத்தித் துரத்தி அடித்து விரட்டப்பட்டதுடன், தமிழ் மக்களின் வீடுகள் சிங்களக் காடையர்களால் எரியூட்டப்பட்டது.
தென்பகுதியில் தமிழ் மக்கள் வர்த்தகத்தில் கொடிகட்டிப் பறந்த நிலையில், இந்தக் கலவரத்தின் போது தமிழ் மக்களிள் வர்த்தக நிலையங்கள் இருந்த தடம் தெரியாமல் அழிக்கப்பட்டது.
கொடூரக் கலவரத்தில் சிக்கி பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் சாவைத் தழுவியதுடன், பல நூற்றுக் கணக்கானோர் காயமடைந்தனர்.
பலகோடி ரூபா பெறுமதியான தமிழ் மக்களின் சொத்துக்கள் எரித்துச் சாம்பராக்கப்பட்டதுடன், சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளின் கண்கள் பிடுங்கப்பட்டு, உடல் சிதைக்கப்பட்டு கோரமாகக் கொல்லப்பட்டனர்.
ஈழத் தமிழர்களின் ஆயுதப் போராட்டம், இந்தக் கலவரத்துடன் உத்வேகம் பெற்றதுடன், தமிழர்களின் வரலாற்றைத் திருப்பிப் போட்ட, குருதிக் கொப்பளங்களால் நினைவுகளை எழுதிய கறுப்பு யூலை – இன்றும் மறக்க முடியாத மனவடுவை ஏற்படுதிச் சென்ற கறுப்பு யூலை, 35 ஆவது ஆண்டில் இன்று நினைவுகூரப்படுகிறது.