இலங்கையின் 70வது சுதந்திரத் தினத்தை முன்னிட்டு சனாதிபதியின் சிறப்பு பொதுமன்னப்பின் கீழ் 544 சிறைக்கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சிறிய குற்றச்செயல்கள் தொடர்பில் சிறைத் தண்டனைப் பெற்றிருந்த கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் துசார உபுல்தெனிய குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய அநுராதபுரம், களுத்துறை, நீர்கொழும்பு, மஹர உள்ளிட்ட நாடுபூராகவும் உள்ள ஏனைய சிறைச்சாலைகளிலுள்ள கைதிகள் 544 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நல்லிணக்கம் என்று தொடர்ந்து கூறிவரும் இலங்கை அரசு, அதனை வெளிப்படுத்தும் முகமாக தமிழ் அரசியல் கைதிகளையும் இதன்போது விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்ட போதிலும், வழக்கு விசாரணைகள் இன்றி, நீதி மறுக்கப்பட்டு பல ஆண்டுகளாக சிறை வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் எவரும் இதன்போது விடுவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.