முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

இலங்கையில் மிக மோசமான பொருளாதார சமூக விளைவுகள் ஏற்படலாம் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் எச்சரித்துள்ளார்

834

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியால் மிக மோசமான பொருளாதார சமூக விளைவுகள் ஏற்படலாம் என்று இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவர் அலைனா டெப்பிலிட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தற்போதைய அரசியல் நெருக்கடியை வெளிப்படையான முறையில், சனநாயக வழியில் உடனடியாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இலங்கையையும், அதன் தலைவர்களையும், ஒரு நண்பராகவும், பங்குதாரராகவும், வலியுறுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க தூதுவராகப் பதவியேற்ற பின்னர் முதல்முறையாக அளித்துள்ள ஊடகச் செவ்வியிலேயே இதனைத் தெரிவித்துள்ள அவர், இந்த அரசியல் போட்டியில் எங்களுக்குப் பிடித்தமானவை என்று எதுவும் கிடையாது எனவும், இந்த மோதல்களில் தாங்கள் ஈடுபாடு கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளார்.

அரசியலமைப்பு நடைமுறைகளையும், வெளிப்படைத்தன்மையையும் மதிக்கும் ஒரு சட்டபூர்வமான அரசாங்கம் உருவாக்கப்படுவதைத்தான் தாங்கள் எதிர்பார்ப்பதாகவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், அரசியலமைப்பு கட்டமைப்புக்குள் இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நெருக்கடியைத் தீர்க்குமாறு அரசியல் தலைமைக்கும் இலங்கை அதிபர் சிறிசேனவும் அழைப்பு விடுத்துள்ளதாகவும், நாட்டின் அரசியல் நற்பெயரை இலங்கை மீட்டெடுக்க வேண்டும் என்றும், தற்போதைய அரசியல் நெருக்கடி இந்த நற்பெயரை குறைக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த நெருக்கடியினால், சில மோசமான பொருளாதார விளைவுகள் ஏற்படுகின்றன எனவும், மிலேனியம் சவால் நிதிய உதவிகள், சட்டத்தின் ஆட்சி மற்றும் நல்லாட்சி போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது என்றும், தற்போதைய நெருக்கடி எவ்வாறு தீர்க்கப்படும் என்பதைப் பொறுத்தே, தாங்கள் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கு முன்னோக்கி செல்ல முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே தமது இருதரப்பு வாய்ப்புகள் சிலவற்றில், இந்த நெருக்கடி நிச்சயமாக தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், இந்த நெருக்கடி குறுகிய காலத்துக்குள், விரைவாக தீர்த்துக் கொள்ளப்படும் என்று நம்புவதாகவும், சட்டபூர்வமான, வெளிப்படையான மற்றும் சனநாயக வழிமுறைகளில் இருந்து வரும் எந்தவொரு அரசாங்கத்துடனும் தாங்கள் வேலை செய்ய தயாராக உள்ளதாகவும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் நடத்துவதற்கு யாரையும் தாங்கள் தடுக்கவில்லை எனவும், இந்த நெருக்கடியை ஒரு தேர்தல் தான் தீர்க்கும் என்றால், அதற்கான சனநாயக நடைமுறைகள் கடைபிடிக்கப்படுவதை மதிக்கிறோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *