இலங்கையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு, சிறிலங்கா இராணுவத்தினர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளனர் எனவும், போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 10 ஆண்டுகளாகியுள்ள நிலையில், இலங்கையில் பல மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றும் இலங்கை சனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தொடரின் முதலாவது கூட்டம், நியூயோரக் நகரிலுள்ள ஐ.நா பிரதான அலுவலகத்தில், நேற்று ஆரம்பமான நிலையில், இந்தக் கூட்டத்தொடரில் கலந்துகொண்ட சிறிசேன, அமெரிக்கா நேரப்படி மாலை 5.15 மணியளவில, உரையாற்றியபோதே இவ்வாறு கூறியுள்ளார்.
இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ள இடமளிக்குமாறும், இந்த விடயத்தில் வெளிநாடுகளின் அழுத்தங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள், தமக்குத் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வகையில் மாற்றங்களுடன் கூடிய இலங்கையை, புதிய கண்ணோட்டத்துடனும் புதிய சிந்தனையுடனும் பார்வையிடுமாறும், அனைத்துலகத்திடம் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
முடிந்தால் தமது பிரச்சினையை தாமே தீர்த்துக்கொள்வதற்கான ஒத்துழைப்பை மாத்திரம் வழங்குமாறும் அனைத்துலகத்திடம் கோரிய மைத்திரிபால சிறிசேன, தமது நாட்டின் பிரச்சினையில் எவரும் தலையிட வேண்டாம் எனவும் வலியுறுத்தியுள்ளார்.