சிறிலங்காவை சர்வதேச நீதிமன்றத்துக்குப் பரிந்துரைத்தல் உள்ளிட்ட, மூன்று கோரிக்கைகளை பிரித்தானிய அரசிடம் முன்வைத்து, ஈழத் தமிழ் பெண் செயற்பாட்டாளர் ஒருவர், லண்டனில் சாகும் வரையிலான உணவுதவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளார்.
புலம்பெயர்ந்து லண்டனில் வசிக்கும் ‘அம்பிகை செல்வகுமார்’ என்ற செயற்பாட்டாளரே, இன்று இந்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில், பிரித்தானியா கொண்டு வரவுள்ள தீர்மானத்தில், சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு பரிந்துரைத்தல், சர்வதேச சுயாதீன புலனாய்வுப் பொறிமுறையை உருவாக்குதல் மற்றும் சிறிலங்காவுக்கான ஐ.நா. நிரந்தர சிறப்புப் பிரதிநிதியை நியமித்தல் போன்ற விடயங்களை உள்ளடக்க வேண்டும் என பிரித்தானிய அரசிடம் வேண்டுகோள் விடுத்தே சாகும் வரை உணவு தவிர்ப்புப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கவுள்ளதாகவும் அம்பிகை செல்வகுமார் அறிவித்துள்ளார்.
சர்வதேச இனப்படுகொலையைத் தடுத்தல் மற்றும் வழக்காடு மையத்தின் பணிப்பாளராக பணியாற்றும், அம்பிகை, தமிழர்களின் பிரச்சினையை சர்வதேச மயப்படுத்தும் நோக்கத்துடன் செயற்பட்டு வருகிறார்.
தன்னால் முன்வைக்கப்பட்டுள்ள மூன்று கோரிக்கைகளில் ஒன்றையாவது நிறைவேற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ள அவர், அதற்கான சாத்தியங்கள் உள்ளன என்ற நம்பிக்கையுடனேயே இந்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.