யாழ்ப்பாணம், உடுவில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகள் கொரோனா தனிமைப்படுத்தலில் இருந்து தளர்த்தப்படுவதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
உடுவில் பிரதேச செயலகப் பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட 398 குடும்பங்கள் இரு வாரங்களுக்கு தனிமைப்படுத்தலில் இருப்பர்.
இதேவேளை, மருதனார்மடம் சந்தை மற்றும் அதனைச் சூழவுள்ள வர்த்தக நிலையங்கள் இரு வாரங்களுக்கு இயங்காது. தெல்லிப்பளை மற்றும் உடுவில் கோட்டப் பாடசாலைகள் இரண்டு வாரங்களுக்கு இயங்காது.
உடுவில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகள் நேற்று சனிக்கிழமை நள்ளிரவு வரை முடக்கபடுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
அந்நிலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை உடுவில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகள் முடக்கப்பட்டு இருந்தன. நாளை திங்கட்கிழமை முதல் முடக்கம் தளர்த்த படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை வலிகாமம் கல்வி வலயத்துக்கு உட்பட்ட உடுவில் கல்விக் கோட்டப் பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் அறிவித்துள்ளார்.
வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனைக்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.