யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் பதிக்கப்பட்டிருந்த மாவீரர்களின் கல்வெட்டுக்கள் ஊரெழுவில் சிறிலங்கா ஆக்கிரமிப்பு இராணுவத்தின் முகாம் அமைக்கப்பட்டிருந்த காணியிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.
மாவீரர் குடும்பங்களின் விவரங்களைத் திரட்டுவதற்காக ஊரெழு இராணுவப் புலனாய்வாளர்கள் அவற்றை எடுத்துச் சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா ஆக்கிரமிப்பு இராணுவத்தின் முன்னாள் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறியின் பதவிக் காலத்தில் ஊரெழு இராணுவ முகாம் புலனாய்வுப் பிரிவின் முகாமாக இயங்கியது.
வெள்ளை வான்களில் கட்டத்திச் செல்லப்பட்ட தமது பிள்ளைகளை படையினர் அந்த முகாமுக்குள்ளேயே தடுத்துவைத்துள்ளனர் என்று உறவினர்கள் குற்றஞ்சாட்டியிருந்த போதிலும், மனித உரிமைகள் ஆணைக்குழுவோ காவல்துறையினரோ அதுதொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கவில்லை.
இந்த நிலையில் அந்த முகாம் இயங்கிய தனியார் காணி உரியவர்களிடம் மீளக்கையளிக்கப்பட்டதனை அடுத்து, அந்தக் காணியின் துப்புரவாக்கல் பணிகளின் போது, அங்கு புதைக்கப்பட்டிருந்த மாவீரர்களின் கல்வெட்டுகள் பல மீட்கப்பட்டுள்ளன.
அந்த கல்வெட்டுக்கள் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் இருந்தவையாக இருக்கலாம் என்று நம்பப்படுவதுடன், அந்த கல்வெட்டுக்களிலிருந்த பெயர், முகவரி மற்றும் வீரச்சாவடைந்த நாள் உள்ளிட்ட விவரங்களை வைத்து மாவீரர் குடும்பங்களை இராணுவ புலனாய்வாளர்கள் ஆராந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.