தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி சென்று மீன்பிடிப்பதால் தான், சிறிலங்கா கடற்படையினர் தாக்குதல் நடத்துவதாக, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழக மீனவர்களை அத்துமீறி தாக்கும் சிறிலங்கா கடற்படையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக் கோரி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணையில், பதில் அளித்துள்ள மத்திய அரசு தரப்பு சட்டவாளர், தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி செல்வதாலேயே சிறிலங்கா கடற்படையின் தாக்குதலுக்கு உள்ளாவதாக தெரிவித்துள்ளார்.
இந்திய மீனவர்களை சிறிலங்கா கடற்படையினர் தாக்குவதை தடுக்கும் வகையில் சிறப்புக்குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து, எல்லைத் தாண்டும் போது அபாய ஒலி எழுப்பும் நவீன கருவிகளை வழங்கினால் இது போன்ற பிரச்சினைகளை களையலாம் என கூறி இந்த வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்துள்ளனர்.