“எழுக தமிழ்” பேரணிக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் எழுக தமிழ் ஏற்பாட்டுக்குழு சார்பில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
எதிர்வரும் 24ஆம் நாள், அதாவது நாளை மறுநாள் சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு “”எழுக தமிழ்”” மக்கள் பேரணி நல்லூர் கந்தசுவாமி கோவிலின் முன்றளிலிருந்தும் யாழ் பல்கலைக்கழக முன்றளிலிருந்தும் ஆரம்பமாகி யாழ் முற்றவெளியை சென்றடைய இருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
முன்னதாக யாழ்ப்பாணம் கச்சேரி முன்றல்,கல்வியங்காடு ஆகிய இடங்களில் இருந்து பேரணி புறப்படும் என அறிவித்திருந்த போதிலும், தற்போது அந்த ஆரம்ப இடங்களில் மாற்றம் செய்யப்பட்டு, நல்லூர் கந்தசுவாமி கோவிலின் முன்றல் மற்றும் யாழ் பல்கலைகழக முன்றல் ஆகிய இரண்டு இடங்களில் இருந்து மாத்திரம் பேரணிகள் புறப்படும் என்பதை கவனத்தில் கொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முற்றவெளியில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் முதலமைச்சரும், தமிழ் மக்கள் பேரவையின் முக்கிய பிரதிநிதிகளும் உரையாற்றுவதுடன், முக்கியமான பிரகடணங்களும் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமத்தின் பலபகுதிகள், தீவகத்திலிருந்தும் மக்கள் இலகுவாக இப்பேரணியில் பங்கு கொள்ளும் பொருட்டு பேரூந்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றும், தமது சொந்த வாகனங்களில் வரக்கூடியவர்கள் அனைவரும் 9.00 மணிக்கு முன்பாக பேரணி ஆரம்பிக்கும் இடங்களுக்கு வருமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேவேளை பேரணியை குழப்பும் பொருட்டு ஒரு சில ஊடகங்கள் தவறான செய்திகளையும் கருத்துக்களையும் வெளியிட்டு வருகின்றன என்றும் தெரிவித்துள்ள அவர், பேரணிக்குத் தேவையான அனைத்துப் பணிகளும் சட்டபூர்வமாக செய்யப்பட்டிருக்கின்றன என்பதை மக்களுக்கு அறியத்தருவதாகவும் தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்டத்தின் அனைத்து வர்த்தக சங்கங்களும் தமது வியாபார நிலையங்களைப் பூட்டி “எழுக தமிழ்” பேரணியில் பங்கு கொள்வதாக அறிவித்துள்ள நிலையில், அவர்களுக்கு தமது மனமார்ந்த நன்றிகளையும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் யாழ் மாவட்டத்திலுள்ள தொழிற்சங்கங்களும்,சிவில் அமைப்புக்களும், பொது அமைப்புக்களும், பல்கலைக்கழக சமூகமும் மற்றும் கற்றல் கற்பித்தல் சமூகங்களும் பேரணியில் கலந்து கொள்ள இருக்கின்றார்கள் என்றும் தகவல் வெளியிட்டுள்ள அவர், பேரணியில் கலந்துகொள்ளும் இந்த அனைத்து அமைப்பினரும் எழுக தமிழ் என்ற செற்பதத்துடன் அவர்களது பதாதைகளுடன் இப்பேரணியில் கலந்து கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.