பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யுமாறு, தமிழக அமைச்சரவையில், மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
“பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.
அந்தத் தீர்மானத்தின் மீது எந்த முடிவையும் எடுக்காமல் 28 மாதங்களாகக் கிடப்பில் வைத்திருந்த ஆளுநர், உச்சநீதிமன்றம் கடிந்து கொண்டு காலக்கெடு விதித்த பின்னரே, இப்போது முடிவெடுத்திருக்கிறார்.
கடந்த ஜனவரி 25-ம் நாள் எடுக்கப்பட்ட ஆளுநரின் முடிவு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரம் மூலமாக தெரியவந்திருக்கிறது.
ஆளுநர் மட்டுமே தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்தார் என்பதைவிட பா.ஜ.க. தலைமையிலான மோடி அரசின் முடிவைத்தான் ஆளுநர் தெரிவித்துள்ளார் என்பது உறுதியாகிறது.
இது ஆளுநரின், மோடி அரசின் தமிழர் விரோத மனோபாவத்தையே வெளிப்படுத்துகிறது.” என்றும் அவர் கூறியுள்ளார்.