ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்காவுக்கு எதிராக வாக்களிக்காமல் புறக்கணித்த இந்தியாவின் செயலைக் கண்டித்துள்ள, காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம், பச்சை துரோகம் செய்த அதிமுக – பாஜ.க- கூட்டணிக்கு தமிழகம் தகுந்த தண்டனையை தர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அவரது கீச்சக பதிவில், “ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் சிறிலங்கா பற்றிய தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்காமல் இந்தியா புறக்கணித்திருக்கிறது.
இது தமிழர்களுக்கும் தமிழர் உணர்வுகளுக்கும் பாஜக அரசு செய்த மாபெரும் துரோகம், மாபாதகச் செயல்.
இச்செயல் ஒன்றே போதும், அதிமுக – பா.ஜ., கூட்டணியை எதிர்த்து ஒருமனதாக தமிழக வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்.
பச்சைத் துரோகத்திற்கு தகுந்த தண்டனையைத் தமிழகம் தரவேண்டும்.
வெளியறவு அமைச்சர் ஜெய்சங்கர், அரசின் வற்புறுத்தலால் ஐ.நா மனித உரிமை அமைப்பின் தீர்மானத்தைப் புறக்கணித்தார் என்றால், தமிழர்களின் உணர்வுகளை மதித்து அவர் பதவி விலக வேண்டும்.” என்றும் சிதம்பரம், அதில் குறிப்பிட்டுள்ளார்.