ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நேற்று நடந்த விவாதத்தின் போது, சிறிலங்காவுக்கு ஆதரவாக 21 நாடுகளும், எதிராக 15 நாடுகளும் கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில், நேற்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் சிறிலங்கா தொடர்பான அறிக்கை குறித்த விவாதம் இடம்பெற்றது,
இந்த விவாதத்தில் உரையாற்றிய பிரித்தானியா, நோர்வே, கனடா, அமெரிக்கா, ஜேர்மனி, ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள், சிறிலங்கா அரசின் நிலைப்பாட்டுக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டுள்ளன.
எனினும், இந்தியாவும், ஜப்பானும் நடுநிலையான நிலைப்பாட்டுடன் கருத்துக்களை முன்வைத்துள்ளன.
அவுஸ்ரேலியாவும், மிதமான தொனியிலேயே கருத்து வெளியிட்டுள்ளது.
அதேவேளை, சிறிலங்காவின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக 21 நாடுகள் கருத்துக்களை வெளியிட்டுள்ளன.
ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், ஈரான், வியட்நாம், மாலைதீவுகள், கியூபா, நிக்கரகுவா, எரித்ரியா, நேபாளம், கம்போடியா, லாவோஸ், அஜர்பைஜான், பெலாரஸ், வடகொரியா, காபோன், பிலிப்பைன்ஸ், சிரியா, எகிப்து உள்ளிட்ட நாடுகளே சிறிலங்கா அரசின் நிலைப்பாட்டுக்கு ஆதரவளித்துள்ளன.
எனினும், சிறிலங்காவுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்ட 21 நாடுகளில், 10 நாடுகள் மட்டுமே ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வாக்களிக்கும் தகைமை பெற்றுள்ள உறுப்பு நாடுகள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.