ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இந்தியா தம்மைக் கைவிட்டு விட முடியாது என்று சிறிலங்கா வெளியுறவு அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
தற்போதைய பேரவை உறுப்பு நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகியவை சிறிலங்காவை ஆதரிக்கும் என்று அட்மிரல் ஜயநாத் கொலம்பகே நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
பிராந்தியத்தில் உள்ள நாடுகள் ஜெனிவாவில் ஆதரவை வழங்கவில்லை என்றால் மிகவும் சங்கடமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜெனிவாவில் ஆதரவு தருமாறு இந்தியப் பிரதமருக்கே முதல் கடிதம் ஜனாதிபதியினால் எழுதப்பட்டது என்றும், இந்தியத் தூதுவரையே அவர் இதுதொடர்பாக முதலில் சந்தித்தார் என்றும் அட்மிரல் கொலம்பகே கூறியுள்ளார்.
வாக்களிப்பதை தவிர்த்து நடுநிலை வகிப்பதை விட, இந்தியா ஆக்கபூர்வமான, செயல்திறன்மிக்க ஆதரவை வழங்குவதையே சிறிலங்கா எதிர்பார்க்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
13 ஆவது திருத்தம், போரை முடிவுக்கு கொண்டு வந்து, அழிவுகளைத் தடுப்பதில் தோல்வியடைந்து விட்டதாகவும், மாகாணசபை முறையினால், நாட்டின் அபிவிருத்தியை ஏற்படுத்த முடியவில்லை என்றும் அட்மிரல் கொலம்பகே மேலும் தெரிவித்துள்ளார்.