ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகத்திடமிருந்து இலங்கை அரசாங்கம் தப்பித்து விடக்கூடாது என்று, மனித உரிமை செயற்பாட்டாளர் ஷெரின் அப்துல் சரூர் தெரிவித்துள்ளார்.
மனித உரிமை செயற்பாட்டாளர் ஷெரின் சரூர் ஜெனீவாவிற்கு பயணம் மேற்கொண்டு திரும்பிய நிலையில், குறித்த பயணம் தொடர்பாக தொடர்ந்து கருத்து தெரிவித்த போதே இவ்வாறு கூறியுள்ளார்.
சிரியா, மியன்மார் போன்ற விடயங்கள் அண்மைக்காலமாக ஐ.நா.வின் பேசுபொருளாகியுள்ள நிலையில், இலங்கை விவகாரம் பின்தள்ளப்பட்டுள்ளது எனவும், அத்துடன் இலங்கையில் நீதிக்கான பொறிமுறை ஏற்படாத சூழ்நிலையே காணப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனை ஐ.நா.வின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கே தாம் ஜெனீவாவிற்கு பயணம் செய்திருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஐ.நா.வின் தீர்மானங்களை நிறைவேற்றிவிட்டதாக கூறி எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. கூட்டத்தொரில் இலங்கை விவகாரங்களை மூடிவிட இலங்கை அரசாங்கம் தீர்மானிக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஆனால் அவ்வாறான நிலை ஏற்படக் கூடாது எனவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணயகத்திடமிருந்து இலங்கை அரசாங்கம் தப்பித்து விடக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.