வடக்கு கிழக்கு பல்கலை மாணவர்களின் ஒருங்கிணைப்பில் ஐந்து கட்சிகள் இணைந்து எடுத்துள்ள 13 அம்சக் கோரிக்கைளை முன்வைத்து தமிழ் தேசிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான மூன்று வேட்பாளர்களும் தயாராக இருந்திருக்கவில்லை.
இவ்வாறான நிலையில், தபால் மூல வாக்களிப்பு முன்னதாக அறிவிப்பொன்ற விடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இணக்கப்பாட்டினை எட்டியிருந்த கட்சிகளில் சில இறுக்கமான நிலைப்பாட்டில் இருந்ததன் காரணத்தால் நிபந்தனைகளை யாருமே ஏற்காத நிலையில் தபால் மூல வாக்காளர்களே சுயதீனமாக தீர்மானத்தினை எடுத்து வாக்களிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அத்துடன் அனைத்து வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களும் வெளியிடப்பட்ட பின்னர் மீண்டும் ஐந்து கட்சிகளும் கூடி ஆராய்ந்து முடிவெடுப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு இறுதியாக நடைபெற்ற ஐந்து கட்சிகளின் கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டிருந்தாலும் மீண்டும் எப்போது கூடுவதென்று திகதியிடப்படாத நிலையிலேயே அக்கூட்டம் நிறைவடைந்திருந்தது.
இந்நிலையில் தற்போது அனைத்து பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளியிடப்படுத்தப்பட்ட நிலையில் மீண்டும் ஐந்து தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் செயற்பாட்டில் யாழ்.பல்கலைக்கழக மாணவர் சங்கத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை அல்லது நாளை திங்கட் கிழமைக்குள் ஐந்து கட்சிகளுக்கிடையிலான சந்திப்பொன்றை மீண்டும் ஏற்படுத்துவதற்கு மாணவர்கள் முனைப்புக் காட்டுக்கின்றர். ஏனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான கட்சியான இலங்கை தமிழரசுக்கட்சி ஏறக்குறைய தீர்மானம் எடுத்துவிட்ட நிலையிலும் தமிழ் மக்களே யாருக்கு வாக்களிப்பது என்று அவர்களே தீர்மானிக்க வேண்டும் என்று தமிழ் மக்கள் கூட்டணி அறிவித்துள்ள நிலையிலும் மீண்டும் ஐந்து கட்சிகளின் சந்திப்பு சாத்தியமாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.