கல்கரி நகரில் அமைந்துள்ள இருவேறு வீடுகளில் இருந்து மூன்று பேர் உயிரிழந்துள்ள நிலையில் மீட்கப்பட்டதனை அடுத்து, அது தொடர்பில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவங்கள் இன்று முற்பகல் 11 மணியளவில் கல்கரி நகரின் தென்கிழக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் உள்ள வீடுகளில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது Applevillage Court பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாகவும், மேலும் ஒரு பெண்ணின் சடலமும் ஆணின் சடலமும் Hidden Valley Driveவில் உள்ள வீடு ஒன்றிலிருந்து மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இநத இரண்டு சம்பவங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு பட்டுள்ளதாக தோன்றுவதாக தெரிவித்துள்ள காவல்துறையினர், எனினும் உயிரிழந்த இருவரும் ஒருவரை ஒருவர் ஏற்கனவே அறிந்தவர்களா என்பது இன்னமும் தெரியவில்லை என்ற விபரம் வெளியிட்டுள்ளனர்.
விசாரணைகள் இன்னமும் ஆரம்ப கட்டத்திலேயே இருப்பதாகவும், தம்மிடம் உள்ள அனைத்து வழங்களையும் பயன்படுத்தி இந்த மரணத்திற்கான காரணத்தினைக் கண்டுபிடிக்க முயற்சிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவங்கள் இடம்பெற்ற வீடுகளில் ஒன்றிலிருந்து சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ள போதிலும், அவரிடம் இருந்து ஆயுதங்கள் ஏதும் கைப்பற்றப்படடதான விபரங்கள் எவையும் வெளியிடப்படவிலலை.