காளையடக்கும் போட்டியை நடாத்துவதற்கான அவசரசட்டம் பிறப்பிக்க முடியாது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தமிழ் நாட்டில் காளையடக்கும் போட்டிகளை நடாத்துமாறு வலியுறுத்தி இளைஞர் சமூகத்தினர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழக முதல்வர் பன்னீர்ச் செல்வம் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து தமது கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
எனினும் இந்த சந்திப்பின் பின்னர் தகவல் வெளியிட்டுள்ள தமிழக முதல்வர், தமிழ்நாட்டில் காளையடக்கும் போட்டிகளை நடாத்த அவசரச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்பதற்கு நடைமுறை சட்டச்சிக்கல்கள் இருப்பாக இந்தியப் பிரதமர் கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் தமிழகம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு ஆதரவாக இருக்கும் என்றும் பிரதமர் கூறியதாகவும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
விரைவில் நல்லது நடக்கும் என்று பிரதமர் கூறினார் என்றும், அந்த வார்த்தையில் நம்பிக்கை கொண்டு அனைவரும் பொறுமை காக்கவேண்டும் என்றும் பன்னீர்ச் செல்வம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்தியப் பிரதமர் தமது டுவிட்டர் பக்கத்தில் காளையடக்கும் போட்டிகளின் கலாசார முக்கியத்துவத்ததை தாம் உணர்ந்திருப்பதாக குறிப்பிட்டு இந்த விளக்கங்களையும் பதிவுசெய்துள்ளார்