வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் தமக்கு எழுதிய கடிதத்தை தமது கீச்சகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதனை புகழ்ந்தும் கருத்து வெளியிட்டுள்ளார்.
யூலை ஆறு என்ற திகதியிட்டு எழுதப்பட்டுள்ள அந்த கடிதத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு ஆவணத்தை வியாழக்கிழமையன்று வெளியிட்டுள்ள அதிபர் டிரம்ப், ”மிகவும் அருமையான குறிப்பு இது ” என்றும் விபரித்துள்ளார்.
பெரிய முன்னேற்றம் நடந்துகொண்டிருக்கிறது என்றும் அமெரிக்க அதிபர் குறிப்பிட்டுள்ள போதிலும், அது தொடர்பில் மேலதிக விபரிப்புக்கள் எதனையும் தெரிவிக்கவில்லை.
வடகொரியத் தலைவர் கிம் யொங் உன் எழுதியுள்ள அந்த கடிதத்தில், மாண்புமிகு அதிபரின் ஆற்றல்மிகுந்த மற்றும் அசாதாரண முயற்சியை தான் மிகவும் பாராட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு தரப்பு நம்பிக்கையானது நடைமுறைக்குரிய செயல்பாடுகளை எடுப்பதற்கான எதிர்கால செயல்முறையை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்..
இரண்டு தரப்பு உறவுகளை ஊக்குவிப்பதில் புதியதொரு சகாப்தத்துக்கான தொடக்க செயல்முறையானது, நம்முடைய அடுத்த சந்திப்பை முன்னெடுத்துச் செல்லும் என்றும் கிம் கூறியுள்ளார்.