கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவில் விக்டோரியா ஏரியில் பயணித்த படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 44 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
தான்சானியா நாட்டில் உள்ள உகாரா தீவில் இருந்து பகோலோரா எனும் மற்றொறு தீவுக்கு இந்த ஏரி வழியாக படகு மூலம் 400-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ள நிலையில் இந்த விபத்துச் சம்பவித்துள்ளது.
அதிகளவிலான பயணிகளை ஏற்றி சென்றதால் எதிர்பாராதவிதமாக படகு ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாகவும், உடனடியாக அங்கு விரைந்த மீட்புப் படையினர் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை உயிருடன் மீட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் மீட்கப்பட்டவர்களுள் 32 பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
படகில் பயணம் செய்த மேலும் பலர் நீரில் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கிழக்கு ஆப்ரிக்க நாடுகளான தான்சானியா, கென்யா மற்றும் உகாண்டா நாடுகளுக்கு இடையே இந்த விக்டோரியா எனும் மிகப்பெரிய ஏரி அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.