முல்லைத்தீவில் தமிழர்களின் பாரம்பரிய வழிபாட்டு இடமான குருந்தூர்மலையில், சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வரும், தொல்பொருள் அகழ்வின் போது, அனுராதபுர காலத்து பௌத்த வழிபாட்டு தல எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சிறிலங்கா படையினரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வாராய்ச்சிகளின் போது, இரண்டு தாதுகோபங்களின் எச்சங்களும், ஒரு கல்வெட்டு, விகாரையின் வாயிலில் அமைக்கப்பட்ட அலங்கார கல், சந்திர வட்டக்கல், மற்றும், கல்தூண்கள் என்பனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவை, அனுராதபுர ஆட்சிக்காலத்தின் முதலாம் இரண்டாம் நூற்றாண்டுகளுக்கு முந்தியவை என்றும் அந்த அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
வவுனியா மாவட்ட உதவி தொல்பொருள் பணிப்பாளர் ஜயதிலக இதுகுறித்து தகவல் வெளியிடுகையில், தாதுகோபம் மண்ணில் புதைந்துள்ளதாகவும், அது முழுமையாக அகழ்வு செய்யப்பட்ட பின்னரே, தாதுகோபத்தின் உயரத்தைக் கண்டறிய முடியும் என்றும், கூறியுள்ளார்.